Tuesday, April 4, 2017

இன்றைய முக்கியமான நாள் அது என்ன..? 04 April

இன்று ஒரு முக்கியமான நாள்... தமிழருக்கு "கொடுமைகள்" பல இழைத்திட்ட எதேச்சாதிகார காமராஜர் அரசு 1967-ல் தூக்கி எறியப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள்..

1) காமராஜர் முதல்வராக 1954-ல் பதவி ஏற்றபோது தமிழ் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 7 %. அவர் 1963-ல் பதவி விலகியபோது எழுத்தறிவு சதவீதம் 37% கொடுமை நெம்பர் 1 !

2) ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்: ஏழை பணக்காரன் பேதம் இளம் பிஞ்சுகள் மனத்தை பாதிக்காமல் இருக்க பள்ளிகளில் சீருடை திட்டம் .. கொடுமை நெம்பர் 2 !

3) வைகை அணை, மணிமுத்தாறு, சாத்தனூர் அணை, கீழ் பவானி, மேல் பவானி அணைகள், அமராவதி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம், நெய்யாறு .. இப்படி பல நீர்ப்பாசனத் திட்டங்கள். இதில் கீழ் பவானி திட்டத்தால் மட்டும் 207000 ஏக்கர் (842 ச .கிமீ ) நிலங்கள் சாகுபடி பயன் பெற்றன... கொடுமை நெம்பர் 3 !

4) BHEL திருச்சி, ஆவடி ரயில் பெட்டித் தொழிற்சாலை, ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், சௌத் இந்தியா விஸ்கோஸ் இப்படி பல தொழில் வளர்ச்சி "கொடுமைகளும்" நடந்தேறின! கொடுமைகள் நெம்பர் 4)

இதுபோக மந்திரிகள் தங்களை பிரபல படுத்திக் கொள்ளாமை, பதவி போனவுடன் அரசாங்க டவுன் பஸ்ஸில் - கக்கன் போல- வீடு திரும்பும் எளிமை, அரசாங்க செலவில் நடைபெறும் நலத் திட்டங்களில் தங்கள் முகத்தை போஸ்டரில் போட்டு, ஏதோ தங்கள் கைக் காசில் அவற்றை நடத்துவதுபோல "வள்ளலே, ஏழைகளின் இதயத் துடிப்பே" என்றெல்லாம் ஜால்ராக்களை வைத்து எழுத வைக்காத எளிமை...

இப்படிப் பல உப "கொடுமைகளும்" செய்த "கொடிய எதேச்சாதிகார " காமராஜா் ஆட்சி "தோற்கடிக்கப்பட்ட" பொன் நாள்" இந்த நன்னாள்!

ஒரே ஒரு கார்ப்பரேஷன் கக்கூஸ் கட்டி விட்டால் கூட, தெரு முழுக்க டியூப் லைட் போட்டு, ஆளுயர போஸ்டர் அடித்து "வரலாற்று சாதனை" என்று வர்ணிக்கும் அடுக்கு மொழி வித்தகர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நாள்..

வீராணம் குழாய் முதல் , 2G வரை , இன்னும் பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் என்று சகலத்திலும் "காசு பார்ப்பதாக" குற்றச் சாட்டுகள் எழுந்த "பொற்காலத்தின்" ஆரம்ப விதை போடப்பட்ட நாள்!

"தமிழக அரசியலில் விஷக் கிருமிகள் புகுந்துவிட்டன" - என்று, முப்பது வருஷம் மந்திரியாய் இருந்தும் பத்து பைசா கஜானா காசை பாக்கெட்டில் போடாத பக்தவத்சலத்தால் வர்ணிக்கப்பட்ட நாள்!

அந்த மாபெரும் எளிய மனிதன்

காமராஜை அவருடைய சொந்த ஊரிலேயே தோற்கடித்து, தமிழன் தன்னுடைய நன்றியைக் காட்டிய நாள்! ஆம்! 1967- பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள்!

அன்று "தமிழ் அன்னை" பொங்கி எழுந்தாள் ! ஆம் பொங்கி எழுந்த தமிழ் அன்னை கழகங்களின் தயவால் இன்று "டாஸ்மாக்" வாசலில் தன் பிள்ளைகளை தேடும் நிலையை அடைய அச்சாரம் போட்ட நாள்!

தமிழன் தன் தலையில் மண் அள்ளி போட்டு 50வருடம் ஆகி விட்டது இன்னும் திருந்தவில்லை

No comments: